Saturday, May 11, 2013

தமிழர் பண்பாடு



தமிழன் இறந்தாலும்
சின்னாபின்னமாகிப் போன பாதைகளில்
எங்காவது ஓரிடத்தில்
பூஞ்செடிகள் வளர்ந்து
கிளை பரப்பி
பூக்களை மலர்ந்து கொள்ளும்
அழிந்து போகாத தமிழர் பண்பாடுகளைப் போல்.

நயகரா எதனை கொட்டுகிறது
வெறும் நீரை மட்டும்தானே தமிழனோ
பசித்து வந்தவனுக்கு புசித்துக் கொள்ள
பொன்னைக் கொடுத்தான்
பொருளைக் கொடுத்தான்
பசியாற ருசியான உணவைக் கொடுத்தான்
பெண்ணையும் கொடுத்து வாழ்க்கையளித்தான்
தண்ணிலம் தன்னில்
தன் பண்பாட்டில் காலடி வைத்து
அடியொற்றி வாழும் தமிழனாய்ப் தன்னைப் புதுப்பித்தான்

உதவுவதற்காய் தோள் கொடுத்தான் அயலவருக்கு
உன்னத பசும் பால் கொடுத்தான் இரவலருக்கு
பிறருக்காய் தன்னுயிர் கொடுத்தான் மறவனாய்
கொழுகொம்பு பற்றி வளர தேரைக் கொடுத்தான் பாரியாய்
யாவும் கொடுத்தான் நாளும் கொடுத்தான் ஒரு புரவலனாய்

பரதேசிகளை ஆற்றுப்படுத்தினான் தமிழன்
தன் ஆளுமையில் நாட்டை போஷிக்கத் துணிந்தான் தமிழன்
அடுத்தவன் ஆளுகை வெறுத்தான் தமிழன்
தம்மவர் வாழ்வை நேசித்தான் இந்த தமிழன்

நீதிக்குப் பணிந்து பசுவொன்றிற்காய் தன் மகனைப் பிரி;ந்தான்
நீதிக்காய் நேர்மைக்காய்ப் போரிட்டான்
அறங்களை நிலை நாட்ட கரங்களைக் கோர்த்தான்
நீதி தவறிய குற்றவுணர்வில் தன்னுயிர் துறந்தான் இந்தத்தமிழன்
இந்த மண் மீது தன் பண்பாட்டைத் தூவி சோலைகள் அமைத்து
இப்பிறவியிலே சுவர்க்கத்தைக் காட்டிவிட்டுச் சென்றான்
பிருந்தாவனம் அமைத்துக் கொண்டான்
தீயவற்றை தாழிட்டு நல்ல பண்பாட்டை திறந்துவிட்டுச் சென்றான் இந்த தமிழன்.

தாகம் தீர்க்காத தமிழினம் அழியவில்லை
நாட்களும் வீணாய்க் கழியவில்லை

தலை வாகெடுத்து பூச்சூடி சேலை கட்டி
சேலை மேலே தாலி இட்டு
தொடியிடையில் ஒட்டியானம் அணிந்து
ஒடுக்கமாக வீதியில் செல்லும்
தமிழ் மாதுவின் அழகில்
பண்பாடு கண்பட்டுப் போகும்
காண்போர் மனம் புண்பட்டு வாடும்
புகழப்பட்ட கிளியோப்பட்ரா இகழப்படுவாள் இவர்களைக் கண்டு

வணக்கத்தல வாசஸ்தலங்களை மனிதர்கள் அலங்கரிக்க
அவர்களின் பண்பாடு வணக்கத்தலங்களுக்கோ தோரணம் போடும்
பார்ப்போரை பரவசப்படுத்தும் பழப்பாகுவின் சுவை உணரும்

உண்மைக்கு உரித்தான அரிச்சந்திரன்
வில் வித்தைக்கு பெயர் போன இராமன்
செய்ந்நன்றி மறவா கர்ணன் கும்பகரணன் ஏகலைவன்
எங்கே அவர்கள் மரணித்து விட்டார்களா?
அவர்கள் சிப்பிக்;குள் இருந்த முத்துக்கள்
சிப்பிகள் அழிந்தாலும் அவரவர் பண்பாட்டு முத்துக்கள்
இன்னும் பளபளப்பாய்த்தான் பாதுகாக்கப்படுகிறது மனங்களிலும் பனுவல்களிலும்.

விதையிலிருந்து விருட்ஷம் என்றால்
நெல்லில் இருந்து அரிசி வந்தால்
தந்தத்திலிருந்து முத்து என்றால்
தமிழனிலிருந்து உண்டாகும் பண்பாடு நல்ல நல்ல பண்போடு.

No comments: